நானும் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்கிறேன். அவ்வப்போது அங்குமிங்குமாக பல்வேறு சந்தர்ப்பங்களில் சாரு பற்றி எழுதியவற்றை தொகுத்து தருகிறேன். சாருவின் வாசகன் என்றாலே ஏதோ ரஜினி ரசிகன் என்பது மாதிரி கேவலப்படுத்தும் போக்கு வலையுலகில் பொதுப்புத்தியாய் பதிந்து விட்டிருக்கிறது. ஆனால் வலையுலகம் தாண்டிய தீவிர வாசகர்கள் மத்தியில் அவர் என்றுமே ஹீரோதான். இன்று சாருவை ஏளனப்படுத்துபவர்களும், அவரை இரண்டாகப் பிளந்து வார்த்தைப்போர் நடத்துபவர்களும் கூட ஒருகாலத்தில் சாருவின் வாசகராய் நிச்சயம் இருந்திருப்பார். சாரு ஒருவகையில் கலைஞர் மாதிரி. கலைஞரை புறக்கணித்து எப்படி தமிழக அரசியல் பேச இயலாதோ, அதுபோல சாருவையும், அவரது எழுத்துக்களையும் புறக்கணித்து, தாண்டிக்குதித்தெல்லாம் தற்கால தமிழிலக்கியம் பேசமுடியாது. அவரைப் பற்றி என்ன வேண்டுமானாலும், யார்வேண்டுமானாலும் விமர்சனம் வைத்துவிட்டுப் போகட்டும். சாரு ஒரு மேஜிக்மேன். எழுத்துக்களால் வித்தை காட்டுபவர். அவரது வித்தைகள் எனக்கு குதூகலத்தை தருகிறது. அழவைக்கிறது. பைத்தியம் பிடிக்க வைக்கிறது. உன்னதத்தின் உச்சியை எட்ட உதவுகிறது. குத்துக்காலிட்டுப் பார்க்கும் ஒரு ஐந்து வயது சிறுவனின் ஆர்வத்தோடு அவரது வித்தைகளை விரும்புகிறேன். வித்தை காட்டுபவரை நேசிக்கிறேன்.<br /><br />* - * - * - * - * - * - * - * - *<br /><br />அன்பில்லாத வாசுகி!<br /> <br />வா சுகி என்று உன்னை அழைக்க ஆசைதான், செருப்பால் அடிப்பாயோ என்று பயந்து 'வா'வுக்கும் 'சு'வுக்கும் இடைவெளி விடாமல் வாசுகி என்றே அழைக்கிறேன். நீ இப்பிரதியை வாசித்துக் கொண்டிருக்கும் வேளையில் என்னை கட்டியணைத்து உதடுகளில் முத்தமழை பொழிய நினைத்திருக்கலாம். முதுகில் கத்தியால் குத்த நினைத்திருக்கலாம். உன்மத்தம் பிடித்து என் தலைமுடியை உலுக்கி தவடையில் அறைய நினைத்திருக்கலாம். நீ தோழியா இல்லை காதலியா என்று பாட்டுப்பாடி பெண்ணிடம் தன் உள்ளத்தினை திறந்தவனை காவல்துறை கைது செய்திருக்கிறது. எக்சிஸ்டெண்சியலிஸ்ட் முனியாண்டியின் பிரதிகளை ஒன்பதாவது நூற்றாண்டு செத்த மூளை கலைத்துப் போட்டதைப் போல என்னுடைய பிரதிகளையும் பதினெட்டாம் நூற்றாண்டின் பழுதடைந்த கிட்னி சீட்டுக்கட்டின் சீட்டுகளைப் போல சிதறவிட்டிருக்கிறது. சரியாக ஒன்பது சீட்டுகள். மீதி எங்கே? நல்லவேளை பூக்கோ அயல்நாட்டில் பிறந்து, வாழ்ந்து, மடிந்துவிட்டார். பூக்களே பூக்களே என்று மரத்தை சுற்றி டூயட் பாடும் தமிழ்பட கதாநாயகன்களை பார்த்து ஏன் தெலுங்குகாரர்கள் சிரிக்கிறார்கள். பூக்கு என்ற வார்த்தைக்கு தெலுங்கில் என்ன பொருள் என்று யாராவது அழகிய இளம் தெலுங்குப் பெண்ணிடம் கேட்டுப்பார்த்தால் நாணுவாளா? சினம் கொள்ளுவாளா? சிணுங்குவாளா?. இவ்வார்த்தைக்கு என்ன பொருளென்று பொதுவெளியில் தமிழில் எழுதினால் என்னை தமிழர்கள் கல்லெடித்து அடிப்பார்களா? பூவால் வருடுவார்களா? நான் ஏன் மனநோயாளியாக படைக்கப்படவில்லை? உலக மகிழ்ச்சியையெல்லாம் ஒரு கோப்பை மதுவில் அடக்கி ஒரே மூச்சில் குடித்து கள்வெறி கிளர்த்தெழ ஆனந்த தாண்டவம் ஆடியிருக்கலாமே? எல்லாம் சரி. எழுத்துக்களை எழுத்துக்களால் எழுத்தாய் எழுத முயற்சித்து எழுத இயலாமல் எழுத்தை பயிற்சித்து எழுத்தை பரிட்சீத்து எழுத்துக்களாய் நானே மாறினாலும் எழுத முடியாமல் தோற்று வெட்கி தலைகுனிந்து எழுதி எழுதி செத்துக்கொண்டிருக்கிறேன். நான் சோம்பேறி. யாராவது எழுத்தாய் மாறி எழுத்துக்களை எழுதுங்கள். வாசிக்க மட்டும் செய்கிறேன்.<br /><br /><a href="http://www.luckylookonline.com/2008/10/blog-post_1447.html">http://www.luckylookonline.com/2008/10/blog-post_1447.html</a><br /><br />* - * - * - * - * - * - * - * - *<br /><br />சாருவை பத்தாண்டுகளுக்கு முன்பாக தூரமாக பார்த்து ரசித்திருக்கிறேன். அப்போது ஸீரோ டிகிரி எழுதிக் கொண்டிருந்ததாக நினைவு. காசாமேஜர் ரோட்டில் இருந்த தினமலர் அலுவலகத்துக்கு எப்போதாவது வருவார். அங்கு ஆபிஸ் பாயாக வேலை பார்த்துக் கொண்டிருந்த அந்துமணி இவருக்கு நெருங்கிய நண்பர். சாருவை மட்டுமல்ல ஜி.ஏ, ராஜேஷ்குமார், ஜே.டி.ஆர், அனுராதாரமணன், எஸ்.ஆர்.எஸ், கார்ட்டூன் பீட்டர், ஓவியர் கல்பனா, அலையோசை எம்.பி.மணி என்று ஏகப்பட்டவர்களை பார்க்கும் வாய்ப்பு காசாமேஜர் ரோட்டில் தான் எனக்கு கிடைத்தது.<br /><br />சங்கோஜம் எனது இயல்பு. யாரிடமும் நானாக என்னை அறிமுகப்படுத்திக் கொள்ள மாட்டேன். மற்றவர்கள் ரஜினியையோ, கமலையோ பார்க்க ஆசைப்பட்ட நேரத்தில் எழுத்தாளர்களையும், பத்திரிகையாளர்களையும் நேரில் பார்க்கும் ஆர்வம் எனக்கிருந்தது. பிற்பாடு நான் சந்திக்க விரும்பிய பலரையும் (சுஜாதா, மதன், பாலகுமாரன், சுப்ரஜா, நக்கீரன் கோபால், காமராஜ், சிவசுப்பிரமணியம், ஜி.கவுதம், திருமாவேலன், பா.ராகவன், உதயசூரியன், யெஸ்.பாலபாரதி, வாசுதேவன், ப்ரியா கல்யாணராமன், கிருஷ்ணா டாவின்ஸி, தமிழ்மகன், அருள் எழிலன், ப்ரியா கல்யாணராமன், அசோகன், நா.கதிர்வேலன், கண்ணன் என்று ஏகப்பட்ட பத்திரிகையாளர்கள்) நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. சிலரிடம் பேசியிருக்கிறேன். பலரை தூரத்தில் இருந்து பயத்தோடு, மரியாதையோடு பார்த்ததோடு சரி. இன்னமும் ஒருவரை பார்க்க ஆர்வமுண்டு. அவர் ஆனந்த விகடன் லூசுப்பையன்.<br /><br />இவர்களை நேரில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்த்தபோது அவர்கள் குறித்து நான் மனதுக்குள் கற்பனை செய்து வைத்திருந்த ஒரு தோற்றப்பிம்பம் முற்றிலும் உடைந்துப் போனது. உதாரணத்துக்கு பா.ராகவன் ஷேக்குகள் மாதிரி உடையணிந்திருப்பார், தலையில் யாசர் அராபத் மாதிரி துண்டு கட்டியிருப்பார் என்று நினைத்திருந்தேன். அருள் எழிலன் சேகுவேரா தோற்றத்தில் இருப்பார், இடையில் ஒரு துப்பாக்கியை செருகி வைத்திருப்பார், வீரப்பன் மாதிரி மீசையிருக்கும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். மாறாக ஒருவர் தோற்றத்தில் ஞானப்பழமாகவும், மற்றவர் என்னை மாதிரி கோயிந்தாகவும் இருந்தார். சாரு நான் உருவகப்படுத்தி வைத்திருந்த தோற்றத்துக்கு அச்சு அசலாக பொருந்தியவர். உயரம் மட்டும் கொஞ்சம் கம்மி.<br /><br />சாருவிடம் ஒரு வார்த்தை கூட அப்போது பேசியதில்லை. ஏனோ தெரியவில்லை. சாருவை விட எஸ்.ஆர்.எஸ். தான் அப்போது என்னை மிகவும் கவர்ந்தவர். அவர் மடிப்பாக்கத்து வாசி என்பதால் அவரிடம் சில சமயம் வாலண்டியராக பேசியிருக்கிறேன். எஸ்.ஆர்.எஸ்.ஸை நிறைய பேருக்கு தெரியாது. காண்டு கஜேந்திரன், டமாரு குமாரு கேரக்டர்களையெல்லாம் நான் ஜாலியாக உருவகப்படுத்த எஸ்.ஆர்.எஸ்.ஸின் எழுத்துக்கள் தான் அடிப்படை. ‘தவம்' என்ற மிக சீரியஸான ஒரு நாவலையும் எழுதியவர் அவர். லைட் ரீடிங்கில் ஆர்வம் அதிகமாக இருந்த அந்த வயதில் சாரு என்னை பெரிய அளவில் ஈர்க்கத் தவறினார்.<br /><br />இணையத்தளங்கள் புழக்கத்துக்கு தாராளமாக வந்தபின்னரே சாருவை கோணல்பக்கங்கள் மூலமாக வாசிக்க ஆரம்பித்தேன். ஹெராயின் எப்படிப்பட்ட போதையை தரும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் சாருவின் எழுத்துக்கள் அதைவிட போதை தரவல்லது. பைபிளின் பழைய ஏற்பாடு சைஸில் பிரும்மாண்டமாக இருக்கும் ராஸலீலாவை வாசிக்க எடுத்தவர்கள், தூக்கம் பசி மறந்து முழுக்க வாசித்து முடித்தபின் தான் கீழே வைப்பார்கள். சாருவை முழுக்க முழுக்கவெல்லாம் வாசித்ததில்லை. அனேகமாக அவரது எழுத்துக்களை 30 முதல் 40 சதவிகிதம் தான் வாசித்திருப்பேன். சாரு பங்குகொண்டு உருவாக்கிய 'கர்னாடக முரசும் நவீன தமிழிலக்கியத்தின் மீதான் ஒரு அமைப்பியல் ஆய்வும்' நூலை வாசிக்க ஆர்வமாக இருக்கிறது. இதன் பிரதி சாருவிடமே கூட இப்போது இல்லையென்று நினைக்கிறேன்.<br /><br />முதன்முறையாக ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸீரோ டிகிரி வாசித்தபோது பைத்தியமே பிடித்துப் போனது. இதையெல்லாம் நாவல் என்று எப்படி பைத்தியக்காரர்கள் சொல்கிறார்கள் என்றுகூட நினைத்ததுண்டு. ஆனால் பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாக வாசிப்பை தீவிரப்படுத்திய பின்னர் மீள்வாசிப்பின் போது ஸீரோ டிகிரி வேறு சில பரிமாணங்களை காட்டுகிறது. புதிய வடிவங்களை தமிழிலக்கியத்திற்குள் புகுத்துகிறது என்பதை உணரமுடிந்தது. கண்ணாயிரம் பெருமாள் கேரக்டரை அவர் செதுக்கிய பாணி வெகுவாக கவர்ந்தது.<br /><br />முதல் வாசிப்பில் நான் நிராகரித்த ஸீரோ டிகிரி இன்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு பல சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ஸீரோ டிகிரி தமிழுக்கு மட்டுமே புதிய வடிவமல்ல, இந்திய இலக்கியத்துக்கே புதிய வடிவம் என்பதை இப்போது உணரமுடிகிறது.<br /><br />இரண்டாண்டுகளுக்கு முன்பாக பூகம்பத்தையும், சுனாமியையும் ஏற்படுத்திய ராஸலீலாவுக்கு பிறகு கொஞ்சம் அமைதிகாத்த சாரு இந்த ஆண்டு மே மாதம் மறுபடியும் விஸ்வரூபம் எடுத்தார் குட்டிக்கதைகள் மூலமாக. குட்டிக்கதைகள் என்றதுமே குட்டிகளைப் பற்றியதாக தானிருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு என்னைப் போன்ற ரசிகர்களுக்கு இருந்தது. எதிர்ப்பார்ப்புக்கேற்ப அஸ்வினி என்ற குட்டியிலிருந்தே கதை ஆரம்பமானது. வகையாக கடந்த ஏழு மாதங்களாக தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் கண்ணாயிரம் பெருமாள். சாருவின் ராசியான கூட்டு எண் 9 வரும் வகையில் குட்டிக் கதைகளின் எண்ணிக்கை 108 ஆக நிர்ணயிக்கப்பட்டது.<br /><br />இப்பதிவை எழுதிக்கொண்டிருக்கும் வேளையில் 106 குட்டிக்கதைகள் இணையத்தில் வெளிவந்துவிட்டது. அடுத்த வாரம் நிறைவு பெற்றுவிடும் என்று நம்புகிறேன். பிட்டு படம் மாதிரி பிட்டு பிட்டாக படித்தாலும் ரசிக்க முடிந்தது. ஒரே புத்தகமாக, நாவலாக இது வெளிவரும் என்று நம்புகிறேன். ஒரே மூச்சில் படிக்கும் அனுபவம் அஜால் குஜாலாக இருக்கக்கூடும்.<br /><br />குட்டிக்கதைகள் நூறை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில் கண்ணாயிரம் பெருமாள் தற்கொலை முயற்சி, மீராவுக்கு ஸ்கீஃஸோப்ரீனியா என்று அமளிதுமளிப்பட்டது. கண்ணாயிரம் பெருமால் குவார்ட்டர் அடித்துவிட்டு குப்புறப் படுத்துக்கொள்ள கதையின் பாத்திரங்களில் ஒன்றான விஷால் தொடர்ந்தார். வாசகர்கள் பைத்தியம் பிடித்து அலைந்து கொண்டிருக்கிறார்கள்.<br /><br />சாரு எப்போதோ எம்மெனெம் பற்றி எழுதியது நினைவுக்கு வருகிறது (ராஸலீலா?). எம்மெனெம் தன் மனைவி பெயரை பயன்படுத்தி ஏடாகூடமாக ஒரு ராப் ஆல்பம் தயாரிக்க, அவரது மனைவி தற்கொலைக்கு முயற்சித்து பின்னர் விவாகரத்தும் செய்துவிட்டாராம். கேத்தி ஆக்கர் சொன்னதாக சாரு ஒருமுறை சொல்லியிருந்தார். ”பாத்திரமாக வரும் ‘நான்',ஐயும், லவுகீக ‘நான்'ஐயும் போட்டு குழப்பி, உழப்பிக் கொள்ளக்கூடாது”. இதனால் எல்லாம் உங்களுக்கு ஏதாவது புரிகிறதா? எனக்கு ஏதோ கொஞ்சம் புரிகிறது.<br /><br />குட்டிக்கதைகள் அனேகமாக இந்த புத்தகக் கண்காட்சிக்கு முழுநீளப் புத்தகமாக வரக்கூடும். அதனால் பூலோகப் பிரளயமும் ஏற்படக்கூடும்.<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SknmfEjrTTI/AAAAAAAACRE/qBJYYjqp3LA/s1600-h/charu-01.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 336px; height: 396px;" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SknmfEjrTTI/AAAAAAAACRE/qBJYYjqp3LA/s400/charu-01.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5353063053580258610" /></a> மேலேயிருக்கும் சாருவின் வண்ணப்படம் அவரது படங்களிலேயே எனக்கு மிகவும் பிடித்தது. போதையும், அலட்சியமும்... ஆஹா.. தலைவரின் மனநிலை அப்படம் எடுக்கப்பட்டபோது எப்படியிருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கவே சுவாரஸ்யமாக இருக்கிறது.<br /><br /><a href="http://www.luckylookonline.com/2008/12/blog-post_13.html">http://www.luckylookonline.com/2008/12/blog-post_13.html</a><br /><br />* - * - * - * - * - * - * - * - *<br /><br />சாரு சந்தேகமில்லாமல் 2009ன் ஹீரோ. ஆண்டின் ஆரம்பத்திலேயே அதிரடியாக பத்து புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார். எப்போதும் இல்லாத வகையில் நன்றாகவும் அவரது புத்தகங்கள் விற்று வருகிறது. சரியாக சேல்ஸ் ஆகவில்லை என்று இம்முறை புலம்பமாட்டார் என நம்புகிறேன். ரூபாய் தொள்ளாயிரத்துக்கு மொத்தமாக பத்து புத்தகங்களும் சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கிறது. உயிர்மை அரங்குக்கு வருபவர்களெல்லாம் கையில் சாரு இல்லாமல் திரும்புவதில்லை. உயிர்மையில் மட்டுமல்ல ஜீயே பப்ளிகேஷனிலும் சாரு சக்கைப்போடு போடுகிறார். ‘ஸீரோ டிகிரி’ மக்கள் பதிப்பு முப்பது ரூபாய்க்கும், கோணல் பக்கங்களின் ஒரு தொகுதி பத்துரூபாய்க்கும் அள்ளிக்கொண்டு போகிறது.<br /><br />முன்பெல்லாம் எல்லோரையும் விட்டு ஒதுங்கி தனியாகப் போய்க்கொண்டிருந்தவர் இப்போது பெரும்பாலும் ஒத்துப் போகிறார் என்று நினைக்கிறேன். புத்தக வெளியீடுகளிலும் பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்கிறார். பொறுமையாக பேசுகிறார். உயிர்மை அரங்கில் இரண்டு நாட்கள் இருந்தார். கையெழுத்து கேட்பவர்களிடம் எல்லாம் முகம் சுளிக்காமல் கையெழுத்து போட்டுக் கொடுக்கிறார். ”எக்சிஸ்டென்ஷியலிஸம்னா என்ன?” என்று கேட்ட இளைஞர் ஒருவருக்கு பொறுமையாக பாடம் எடுத்துக் கொண்டிருந்தார். விகடன் ஜாலி ஸ்பெஷலுக்கு ஜாலியாக இண்டர்வியூ கொடுக்கிறார். டப்ளினுக்கு போவதெற்கெல்லாம் நேரம் கிடைப்பது இப்போது அரிதாகியிருக்கலாம்.<br /><br />(குட்டிக்கதைகளைத்) காமரூபக் கதைகளைத் தொடர்ந்து அடுத்த தடாலடி பிராஜக்டைத் தொடங்கிவிட்டாராம். அடுத்தாண்டு தொடக்கத்தில் அவரது எழுத்துக்களை இருபது புத்தகங்களாக ஒருசேர வெளியிடப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.<br /><br />’சாருவின் தொண்டரடிப்பொடியாழ்வார்’ போன்ற விமர்சனங்கள் எனக்கு நகைச்சுவையாக இருக்கிறது. ஒன்றுமில்லாத ரஜினியையே புனிதப் பிம்பமாக்கி மகிழும், முரட்டுத்தனமாக ரசிக்கும் ரசிகமனோபாவம் கொண்ட தமிழ் குமுகாயத்தை சேர்ந்தவர்கள் நாம். சாருவை தூக்கி வைத்துக் கொண்டாட ஆயிரம் காரணங்கள் இருக்கிறது. நாத்திகம்-ஆத்திகம் தொடர்பான அவரது கருத்துக்கள் எனக்கும் ஏற்றுக் கொள்ளத்தக்கவையாக (உவகையளிப்பதாக) தோன்றாத போதிலும் சாருவை ஏனோ ரொம்பவும் பிடித்திருக்கிறது. என் கருத்து எனக்கு என்று இருக்கும் சாருவிடம் எதிர்கருத்து வைத்து பிரயோசனம் இருக்காது என்பது என் தனிப்பட்ட கருத்து. அப்புறம் மனிதர் மம்மி-ரிட்டர்ன்ஸ் ரேஞ்சில் எதுவாவது நம்மைப் பற்றி எழுதுவானேன், வேலியில் போகும் ஓணாணைப் பிடித்து வேட்டிக்குள் விட்டுப்பானேன்.<br /><br /><a href="http://www.luckylookonline.com/2009/01/blog-post_15.html">http://www.luckylookonline.com/2009/01/blog-post_15.html</a><br /><br />* - * - * - * - * - * - * - * - *<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SknnpFQGc9I/AAAAAAAACRM/NKY8_u517lY/s1600-h/charu.jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 268px; height: 400px;" src="http://2.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/SknnpFQGc9I/AAAAAAAACRM/NKY8_u517lY/s400/charu.jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5353064325076906962" /></a>ஒரு காலத்தில் டிகிரி என்ற சொல்லைக் கேட்டதுமே டிகிரி காப்பி தான் நினைவுக்கு வரும். அம்மாவழி சின்னப் பாட்டனார் சிறுவயதில், சிந்தாதிரிப்பேட்டையில் இருந்த ஒரு அய்யர் மெஸ்ஸில் டிகிரி காப்பி வாங்கித் தருவார். அவரும் அனுபவித்துக் குடிப்பார். தஞ்சையில் பிறக்கவேண்டிய உல்லாசவாசி. தப்பித்தவறி உத்திரமேரூருக்கு அருகில் பிறந்து தொலைத்தார். அவரால் நானும் காஃபி பிரியனானேன். வீட்டில் அனைவருக்கும் தேநீர் பிடித்தாலும், எனக்கு மட்டும் எப்போதும் காஃபி தான். காஃபியை குடிக்கும்போது கசப்பாக உணரவேண்டும். குடித்து முடித்தபின் உதடுகளை நாக்கால் தடவினால் லேசாக தித்திக்க வேண்டும். எனக்குப் பிடித்த காஃபிக்கான இலக்கணம் இது. எனக்காகவென்று அம்மா ஸ்பெஷலாக ஃபில்டர் கூட வாங்கி வைத்திருந்தார். இப்போது இன்ஸ்டண்ட் காஃபிக்கு மாறி சில ஆண்டுகளாகிறது.<br /> <br />எனவே இப்போதெல்லாம் டிகிரி என்ற வார்த்தையைக் கேட்டால் காஃபிக்குப் பதிலாக சாரு நினைவுக்கு வருகிறார். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன் சாருவின் ஸீரோ டிகிரியை முதல்முறை வாசித்தபோது மனநிலை சில வாரங்களுக்கு பாதிக்கப்பட்டது. மூளை லட்சம் தடவை கிறுகிறுத்தது. ஒரு கோடி அபின் வில்லைகள் தரக்கூடிய போதையை அப்பிரதி தந்தது. இதன் ஆங்கில மொழியாக்கமும் அதே வாசனையோடு, அதே போதையோடு, அதே கிறுகிறுப்பை அட்சரம் பிசகாமல் தருகிறது. சமீபத்தில் ஒரு நண்பர் ஸீரோ டிகிரியை வாசித்து தலைமுடியை பிய்த்துக் கொண்டு அலைகிறேன் என்று சொன்னார். சாருவை புதியதாக வாசிக்க நினைப்பவர்கள் ராஸலீலாவை முடித்துவிட்டு ஸீரோ டிகிரிக்கு வருவது நலம். மனதளவில் யதார்த்த அதிர்ச்சி மதிப்பீடுகளுக்கு தயாராக முடியும். அதிர்ச்சி = ஷாக். புத்தகம் ஷாக்கடிக்குமா என்று கேட்டால் ஸீரோ டிகிரி ஷாக்கடிக்கும் என்றே சொல்லுவேன். அப்போது ராஸலீலா? சில சமயம் தலையை தடவிக் கொடுக்கும். சில சமயம் தலையை நீருக்கடியில் அழுத்தி மூச்சு திணறவைக்கும்.<br /> <br />ஸீரோ டிகிரியை ஆங்கிலத்தில் வெளியிட்டிருக்கும் பிளாஃப்ட் பப்ளிகேஷன்ஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி அது. ஸீரோவும் சூன்யம் தான். சூன்யத்தின் நிறம் கருப்பு. அதனாலோ என்னவோ நிகழ்ச்சியின் தீமும் கருப்பு. மேடையில் 'நெப்போலியன்' பாட்டிலில் செடியோடு மலர்ந்திருந்த ரோஜாவின் நிறமும் கருப்பு. மேடையின் பேக்டிராப் கருப்பு. சாரு அணிந்திருந்த சட்டையும் கருப்பு. ஐம்பத்தி நான்கு வயதான கமலஹாசனின் இளமைத்தோற்றத்துக்கு சிலிர்க்கிறோம். அவரை விட மூன்று வயது அதிகமான சாரு கமலை விட இளமையாக தெரிகிறார். இன்னும் ஏன் இவரை சினிமாக்காரர்கள் விட்டுவைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அஞ்சாதே படத்தில் பாண்டியராஜன் நடித்த பாத்திரத்தைப் போன்ற பாத்திரங்களில் சாரு நடித்தால் அள்ளிக்கொண்டுப் போகும்.<br /> <br />புத்தகத்தின் சில அத்தியாயங்களை தமிழில் எழுதிய சாருவும், மலையாளத்தில் எழுதியவரும், ஆங்கிலத்தில் எழுதியவர்களும் வாசித்துக் காட்டினார்கள். மொழிமாற்றமாக (Translation) இல்லாமல் மொழியாக்கமாக (Transcreation) செய்யப்பட்டிருப்பதாக விழாவுக்கு வந்திருந்த மொழிப்பெயர்ப்பாளர்கள் சிலர் குறிப்பிட்டார்கள். கலாஸ்ரீ, நிலாஸ்ரீ அத்தியாயத்தை வாசிக்கும்போதெல்லாம் சாரு சரியான பிக்கப்பில் இல்லை. சாருவின் கம்பீரத் தோற்றத்துக்கு ஏற்ற சிம்மக்குரல் அவருக்கு இல்லையோ என்ற தோற்றம் எழுந்தது. மனிதர் மென்மையாக, மெதுவாகப் வாசித்தார். சாரு ரசிகர்கள் பட்டா போட்டு அடிக்கடி வாசிக்கும் அந்த 'எலக்ட்ரிக் சுடுகாடு' அத்தியாயம் வந்தபோது குரலை உயர்த்தி ஏற்ற இறக்கத்தோடு தமிழின் புனிதவார்த்தைகளை சாரு உச்சஸ்தாயியில் வாசித்தபோது அப்ளாஸ் அள்ளிக்கொண்டு போனது. அந்த அத்தியாயத்தை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தது ஆச்சரியமல்ல. ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ய ரொம்பவும் மெனக்கெட வேண்டியிருந்தது என்று குறிப்பிட்டார்கள். Pussy, Bastard, pitch, fuck, மானே, தேனே போட்டு எப்படியோ அசல் பிரதியில் இருந்த அம்சங்களை கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள். அந்த அத்தியாயத்துக்கு மட்டும் மூன்று பாட்டில் ரம் செலவாகியிருக்கும் என்று தெரிகிறது. அதுபோலவே 1930களின் பிராமண குடும்பத்து தமிழை மலையாளம் மட்டுமன்றி ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்வதற்குள் டவுசர் கிழிந்திருக்கிறது.<br /> <br />ஸீரோ டிகிரியின் ஆங்கிலப் பதிப்பை மட்டும் அமெரிக்க எழுத்தாளர் கேத் ஆக்கருக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். தமிழ் பதிப்பை அவரது 'அம்முவுக்கு' சமர்ப்பித்திருந்தார் என்பதாக நினைவு. கேத் ஆக்கர் தன் உடலையே பரிசோதனையாக்கி, விளைவுகளை எழுத்தாக்கியவர் என்று சாரு குறிப்பிட்டார். ராஸலீலா படித்தவர்கள் சாருவும் அத்தகைய எழுத்தாளர் தான் என்பதை உணர முடியும். ஸீரோ டிகிரி ஆங்கிலப் பிரதியை வாசித்த அமெரிக்கர்கள் சிலர் சாரு நிவேதிதா ஒரு பெண் எழுத்தாளர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களாம். இப்பிரதி மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்படுவதற்கு முன்பாக கிட்டத்தட்ட ஒன்றரை நூற்றாண்டுகளில் தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்கள் நூற்றி சில்லறை தான் இருந்ததாம். ஸீரோ டிகிரி மலையாளத்தில் வந்தபின் தீவிர இலக்கிய வெறி கொண்ட மலையாளிகள் தமிழிலும் தீவிர இலக்கியம் குறித்த சில முயற்சிகள் நடந்து வருவதாக அறிந்தார்களாம். ஸீரோ டிகிரிக்கு பின்னர் தமிழில் இருந்து மலையாளத்துக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களின் எண்ணிக்கை கடந்த ஒன்றரை நூற்றாண்டு கால மொழிமாற்ற நூல்களை விட அதிகம் என்று மலையாள எழுத்தாளர் சக்காரியா குறிப்பிட்டார். தமிழிலக்கியத்தில் சாருவுக்கான இடம் எதுவென்பதை சக்காரியாவின் அந்த கருத்து திடமாக வெளிப்படுத்தியது.<br /><br />* - * - * - * - * - * - * - * - *<br /><br /><a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Sknn76iIKOI/AAAAAAAACRU/fd3jrUVaqdQ/s1600-h/charu+(1).jpg"><img style="display:block; margin:0px auto 10px; text-align:center;cursor:pointer; cursor:hand;width: 400px; height: 255px;" src="http://3.bp.blogspot.com/_ZSCN2FTy2pU/Sknn76iIKOI/AAAAAAAACRU/fd3jrUVaqdQ/s400/charu+(1).jpg" border="0" alt=""id="BLOGGER_PHOTO_ID_5353064648617240802" /></a>அபத்தமாக பேசுபவர்களையும், எழுதுபவர்களையும் கண்டால் எல்லோருக்கும் எரிச்சல் மண்டுவது இயல்பு. ஆயினும் சில நேரங்களில் நம்முடைய ஆதர்சங்களே அபத்தமாக சிந்தித்து, அதையும் எழுதியோ, பேசியோ தொலைக்கும்போது எரிச்சலோடு, கோபமும் இணைந்துக் கொள்கிறது. அதுபோன்ற சீற்றமான, நிதானமற்ற மனநிலையில் இப்போது எழுதுகிறேன்.<br /><br />சிறுவயதிலிருந்தே ஏதாவது பத்திரிகைகளில் சாரு நிவேதிதா என்ற பெயரை காணநேர்ந்தால் அக்கட்டுரையையோ, புனைவையோ தவறவிடாமல் வாசிப்பது என் வழக்கம். சாரு என்ற பெயர் எனக்குள் ஏற்படுத்திய மேஜிக்குகள் எண்ணிலடங்கா. ஒரு அறிவுஜீவியாக இருந்தும் மிக எளிமையாக, வாசகன் அஞ்சாமல் அணுகக்கூடிய மொழிநடை அவருடையது. பெரும்பாலும் சுயபுராணமாக இருந்தாலும் அவருடைய சுய எள்ளல், சுய பச்சாதாபம் போன்றவை வாசிக்க சுவாரஸ்யமானதாகவே இருக்கும். சரோஜாதேவிரக எழுத்தாளர்கள் தவிர்த்து கைமைதுனம் செய்வதை கூட வெளிப்படையாக ஒத்துக்கொள்ளும் பன்முகப்பார்வை கொண்ட தமிழ் எழுத்தாளர் அவர் ஒருவர் மட்டுமே.<br /><br />அவர் எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு அவர் ஒரு நாத்திகர் என்ற தோற்றம் மிகுந்திருக்கும். எனக்குள்ளும் மிகுந்திருந்தது. சுஜாதா மறைவுக்குப் பின்னர் திடீரென்று சுஜாதாவின் இடத்தை பிடிக்க வேண்டும் (எந்த கொம்பனாலும் பிடிக்கமுடியாது என்பது என் எண்ணம்) என்ற பேராசையாலோ என்னவோ திடீரென தன்னை ஆத்திகர் என்று சமீபத்தில் அறிவித்துக் கொண்டிருக்கிறார். அவர் நாத்திகரோ, ஆத்திகரோ அது யாருக்கும் பிரச்சினையில்லை. ஆனால் திடீரென புதியதாக ஏற்றுக்கொண்ட ஆத்திக வேடத்துக்காக இறைமறுப்பாளர்களையும், இறைமறுப்பு முற்போக்கு சிந்தனைகளையும் மிக கேவலமாக விமர்சிப்பது சாரு போன்ற (இதுவரை) முற்போக்கு வேடமணிந்த ஒரு எழுத்தாளருக்கு அழகல்ல.<br /><br />'விபச்சாரம் ஏன் நடக்கிறது?' என்ற கேள்விக்கு இதுவரை விடை தெரியாமல் இருந்தது. சாரு கண்டுபிடித்து விட்டார். இறைமறுப்பு தான் விபச்சாரத்துக்கு காரணமாம். ரஷ்யா ஜார் மன்னர்கள் ஆட்சிக்காலத்தில் வறுமையால் பீடிக்கப்பட்டிருந்தபோதும் கூட மதநெறி தந்த ஆன்மபலத்தால் ரஷ்யர்கள் ஒழுக்கமாக இருந்தார்களாம். ஆனால் கம்யூனிஸம் ஆட்சிக் கட்டிலேறி கடவுள் மறுப்பு விவாதங்களும், சிந்தனைகளும் வந்த பின்னர் ரஷ்யாவில் விபச்சாரம் பெருகி விட்டதாம். எவ்வளவு அபத்தம் இது? கடவுள் மறுப்பு சிந்தனைகளை மட்டுமன்றி கம்யூனிஸத்தின் மீதும் போகிறபோக்கில் சாணி அடித்துவிட்டுப் போகிறார் சாரு. இவரது இந்த புதிய கண்டுபிடிப்புக்கு தோதாக அவரது இலங்கை நண்பர் ஒருவருக்கு ரஷ்யாவில் நிகழ்ந்த சில அனுபவங்களை வாதத்துக்கு வலுவாக சேர்த்துக் கொள்கிறார்.<br /><br />அதே சாரு தாய்லாந்து நாட்டின் விபச்சாரம் பற்றியும், பத்து வயது குழந்தைகள் கூட மிகக்குறைவான (50 ரூபாய்) தொகைக்கு விபச்சாரத்துக்கு தயாராக இருப்பது பற்றியும் எழுதுகிறார். தாய்லாந்து நாட்டில் கம்யூனிஸ ஆட்சி நடக்கிறதா? கடவுள் மறுப்பு விவாதங்கள் விவாதிக்கப்படுகிறதா? என்பது பற்றி சாருவுக்கு தெரியாதா? கிட்டத்தட்ட தொண்ணூற்றி ஒன்பது சதவிகித தாய்லாந்து மக்கள் மதநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் கொண்டவர்கள் தானே?<br /><br />தாய்லாந்துக்கு போவானேன்? இந்தியாவில் என்ன வாழுகிறது? இங்கே (இப்போது சாரு உட்பட) தொண்ணூற்றி ஐந்து சதவிகிதம் பேர் இறைநம்பிக்கை கொண்டவர்களாக தானே இருக்கிறார்கள்? இங்கே ஏன் சோனாகஞ்சும், மும்பை சிகப்பு விளக்கு பகுதியும் இருக்கிறது? ஐம்பது ரூபாய்க்கு உடலை அரை மணி நேரத்துக்கு விற்க சென்னையில் கூட விளிம்புநிலைக்கு தள்ளப்பட்ட பெண்கள் இருப்பது நமக்கு தெரியுமோ இல்லையோ.. சாருவுக்கு நிச்சயமாகத் தெரியும். இதற்கெல்லாம் கூட காரணம் இறைமறுப்பா?<br /><br />இறைமறுப்பு சிந்தனைகளை உலகளவில் பரபரப்பாக விவாதித்த ஜெர்மன் சிந்தனையாளர்களையும்.. அந்நாட்டையும், ஐம்பது ஆண்டுகளாக இறைமறுப்பு கம்யூனிஸ ஆட்சி நடக்கும் கியூபா நாட்டையும் சாரு மறந்துவிட்டாரா? இல்லை அங்கும் விபச்சாரமும், சமூகக்குற்றங்களும் இன்னமும் தலைவிரித்து ஆடுகிறது என்று நம்பிக்கொண்டிருக்கிறாரா? மதநம்பிக்கையும், இறைநம்பிக்கையும் பெரிதும் கொண்டிருக்கும் அமெரிக்கா.. ஆத்திகர்களையே பெரும்பாலும் அதிபர்களாக ஏற்றுக்கொள்ளும் அமெரிக்கா, சர்வதேச அளவில் மனிதநேயத்துக்கு எதிராக செய்துவரும் மனிதகுல விரோத குற்றங்களுக்கு என்ன நியாயம் கற்பிக்கப் போகிறார் சாரு? இறைமறுப்பாளர்களால் உலகுக்கு விளைந்த கேடுகள் அதிகமா? மத அடிப்படைவாதிகளால் உலகுக்கு விளைந்த கேடுகள் அதிகமா? என்பதை சாரு மல்லாந்து படுத்துக் கொண்டு யோசிக்க வேண்டும்.<br /><br />கடவுள் என்ற சொல்லாடல் புழக்கத்திற்கு வருவதற்கு முன்பே விபச்சாரம் என்ற தொழிலும், சமூகக்குற்றங்களும் உலகில் பெருகிவிட்டதை உலக வரலாறு வாசித்த யாருமே உணரமுடியும். இன்னமும் சொல்லப்போனால் சமூகக்குற்றங்கள் செய்வதிலிருந்து மனிதனை காக்க மனிதகுலம் கண்டுபிடித்த ஒரு முறையே மதமும், மதத்துக்கு மூலமான கடவுளும் என்றும் கூறலாம். இறைவன் குறித்த தர்க்கங்களில் வெற்றி காணமுடியாமல் கடைசியாக ஆத்திகர்கள் நாத்திகர்கள் மீது வைக்கும் பலகீனமான விமர்சனம் தான் இறைமறுப்பால் சமூகக்குற்றங்கள் பெருகும் என்பது. சாருவும் கூட அப்படிப்பட்ட விமர்சனத்தை எழுதுவதை காணும்போது “சாருவும் இவ்வளவுதானா?” என்ற ஆயாசமும், ஏமாற்றமும் தான் மிஞ்சுகிறது.<br /><br /><a href="http://www.luckylookonline.com/2008/04/blog-post_29.html">http://www.luckylookonline.com/2008/04/blog-post_29.html</a><div class="blogger-post-footer"><img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/25593973-7018937104156212622?l=www.luckylookonline.com'/></div>
Posted by லக்கிலுக் (luckylook32@gmail.com) on
June 30, 2009 10:35 AM ·
permalink