<p><b>பூலித்தேவனின் குரங்கு</b><br /> <em>-சன்னாசி</em></p> <p><img src="http://dystocia.weblogs.us/wp-content/uploads/2010/03/Fuseli_2.jpg" align=left hspace="5" vspace="5" width=450 height=300 alt="" /></p> <p>ராஜசேகர் என்ற ராஜா முகம்மது தனது காக்கி டிரவுசரை இழுத்து விட்டுக்கொண்டான். வலது இடுப்புக்கருகில் டிரவுசருக்குள் விட்டிருந்த சட்டை காற்றில் புடைத்திருந்தது. இந்த ஓட்டை வழியாத்தான் பூலித்தேவர் தப்பி ஓடினாரு என்றான். ஆம்ஸ்ட்ராங் மெதுவாக வாசல் கல் நிலைப்படியில் ஒரு காலை வைத்து உன்னி அறைக்குள் எட்டிப் பார்த்தான். அறை முழுக்க ஓங்கி உயர்ந்து பெயிண்ட் பூசப்பட்ட பூலித்தேவன் சிலை. சிலையைச் சுற்றி வெற்றிடம் கசங்கிச் சிதறி வழிந்திருந்தது. ஓட்டை எங்க இருக்கு?</p> <p>ஓட்டை மேல் சிமெண்ட் வைத்துப் பூசிவிட்டார்கள். வெகு நாட்களுக்கு முன்பு போட்ட ஓட்டை. புளியங்குடியிலிருந்து சங்கரன்கோயில் வரை நீளமாய்ப் போட்ட ஓட்டை என்றான் ராஜசேகர். வந்தாரா போனாரா என்றான் ஆம்ஸ்ட்ராங். இருவரும் திரும்பி வந்தார்கள். ராஜசேகரிடம் பஸ்ஸுக்குப் போக இரண்டு சர்பத் குடிக்கக் காசு இருந்தது. ராஜசேகருக்குத் தாத்தா நினைவு வந்தது. அவனது தாத்தா ஒரு பெட்டி வைத்திருந்தார். வீட்டைச்சுற்றி ஒரு தோட்டம் வைத்திருந்தார். சின்னத் தோட்டம் - இரண்டு தென்னை, ஒரு பப்பாளி, இரண்டு வேப்பமரம், ஒரு முருங்கை, மணல் நிரப்பிய ஓட்டை போட்ட ஏராளமான பாலிதீன் பைகள், கழுவிச் சுத்தமாக்கப்பட்ட சிறு மாடல் பெயிண்ட் டப்பாக்களுக்குள் விதைகள். பெட்டிக்குள் ஒரு சிறிய பெட்டி, பெட்டி நிறைய ஆணி, பெரும்பாலும் துருப்பிடித்தது. ஒருநாள் அவன் தாத்தாவின் மனைவி அதைத் தூக்கித் தோட்டத்தில் போட்டுவிட்டாள். தாத்தா பெட்டியைத் திறந்து பார்த்திருக்கிறார், ஆணிகளைக் காணோம். வெறி பிடித்தது மாதிரி வீட்டுக்குள் தேடி, கடைசியில் தோட்டத்தில் கண்டுபிடித்திருக்கிறார். ஆணிகளைக் கையில் போட்டுப் பார்த்துக்கொண்டிருந்திருக்கிறார். பிறகு உள்ளே வந்து பழைய இடத்தில் ஆணிகளை வைத்துவிட்டு வெளியே போய் முருங்கையிடம், என் உயிரைக் கழட்டி வெளியே போட்டுவிட்டாள் என்றிருக்கிறார். தோட்டத்துக்குள் அமர்ந்து தனிமையில் ஆணிகளைப் பார்த்து அழுதுகொண்டிருந்திருக்கிறார். முருங்கை மேல் பதிந்து கிடந்த பச்சைப்பாம்பு கூட அசையவில்லை. மெலிந்த வயிற்றுக்கு மேலே மஞ்சளடித்துப்போன வேட்டியின் உத்தேசமான சுற்றல்முண்டுகள் கக் கக் என்று குருவி மாதிரித் துள்ளுகிறது. துணி துவைக்கும் கல் மேலிருந்து ஈக்கிமார் சல் என்று மணலில் விழுகிறது. மேலே கூண்டில் தொங்கிக்கொண்டிருந்த கிளி குறுக்குக்கம்பியிலிருந்து வழுக்கிச் சமாளித்துக்கொண்டு கழுத்தைத் திருப்பிப் பார்த்தது.</p> <p>ஆம்ஸ்ட்ராங் சிறிது நேரம் மௌனமாக இருந்தான்.</p> <p>பூலித்தேவர் ஒரு குரங்கு வளர்த்தார் என்றான் ஆம்ஸ்ட்ராங். </p> <p>பூலித்தேவர் குற்றாலத்துக்குக் குளிக்கப் போனார். அவர் கோவணத்தை ஒரு குரங்கு தூக்கிக்கொண்டு போய்விட்டது, மரம் மரமாய்த் தாவி தனது கூட்டத்துடன் போய்ச் சேர்ந்துகொண்டது. அங்கேயிருந்து கீழே பார்த்து ர்ரிஹ் ஹி என்றது. நெல்கட்டும்செவல்காரர்கள் மரம் மரமாய்த் தாவிப் போய்க் குரங்கைப் பிடித்து வந்தார்கள்.</p> <p>அப்படியா என்றான் ராஜசேகர். </p> <p>ஆமாம் என்றான் ஆம்ஸ்ட்ராங். அது சிங்கவால் குரங்கு, கன்னங் கரேலென்ற நிறம், கூச்சமற்ற வெகு நேரான முறைப்பு, அது புலித்தேவரைக் கட்டி மேய்த்தது என்றான்.</p> <p>அப்படியா என்றான் ராஜசேகர்.</p> <p>புலித்தேவர் ஓட்டை போட்டு தப்பி ஓடியபிறது இந்தக் குரங்கு கைமாறிப் போனது. பல நாள் சாகவே இல்லை. அப்புறம் இது சர்க்கஸுக்குப் போயிருந்தது, அப்புறம் குழந்தைகள் பூங்காவுக்கு, அதற்கப்புறம் ஒரு திருடனிடம் மாட்டி நகைத்திருட்டு கற்றுக்கொண்டது.</p> <p>* * *</p> <p>மயில்துத்த நிறத்தில் தோளைப் போர்த்தி ஒரு மேலங்கி, வெளுத்த மார்புப் பிளவைச்சுற்றி நுனிகள் நொறுங்கிய மேகம் இறங்கிய நிலவு போல ஒரு வெள்ளை பிளவுஸ், பிளவுஸைச் சுற்றி இறுக்கிய ஒரு அரக்குத் துணி. கொண்டையில் வெள்ளைத் துணி. அருகில் ஒரு சிறுமி, அதே உடைகள். ரெஸ்டாரண்டின் பின்வாசல் தெருச்சந்துக்குள் திறந்திருந்தது. செங்கல் சுவரில் ஒற்றைக் காலைச் சாய்த்து நின்று ஃபாபியென் புகைபிடித்துக் கொண்டிருந்தாள், முழுக்கப் பின்னோக்கி இழுத்து வாரப்பட்ட தலைமுடி - புருவமும் நெற்றித்தோலும் ஓங்கி விறைத்திருந்தன. அகன்ற முதுகு, இறுக்கமான வெள்ளைச் சட்டை, காலையொட்டிய கறுப்புக் கால்சராய், சட்டைக்குமேல் சட்டைக்காப்புத் துணி, ரசீதுப்புத்தகம் சொருக ஒரு கங்காருப் பை. இலைகள் நிறம்மாறத் தொடங்கியிருந்தன, தரையில் கிடந்த அமிலத்திலூறிய இலைநுனிகள், செங்கல் தரை மத்தியில் இறுகத்தொடங்கியிருந்த உதிரி மணல், சரிவிறக்கத்தில் பெரும்பாலும் நிரம்பியிருந்த அகன்ற கார்நிறுத்தம். அகன்ற பெரும் தாரையொன்று மதியமென இறங்கிக்கொண்டிருந்தது சாம்பவர்வடகரையில்.</p> <p>ஃபாபியென் கடைசி இழுப்பு சிகரெட்டை இழுத்து கங்குக்குடுவையின் மணலில் அழுத்தி அணைத்துவிட்டு பின்வாசல் வழி வந்து பல்விளக்கி வாயைக் கழுவிக் கொப்புளித்துத் துப்பினாள், சமையலறைத் திறப்பு வழிப் பார்த்தாள். அவளது மேஜைகளிலொன்றில் அவர்கள் அமர்ந்திருந்தனர். மூன்று ஆண்கள், ஒரு சிறுவன். சிறுவனும் பெரும்பாலும் தலை நரைத்து பஞ்சுபோன்ற முடி அழுத்தி வாரப்பட்ட ஒரு வயோதிகரும் ஒருபுறத்தில் அமர்ந்திருக்க, எதிர் வரிசையில் இருவர். ஒருவருக்கு முறுக்கு மீசை. இரண்டு கைகளும் மேஜை மேல் கனமாகப் பதிந்து கிடந்தன. இடக்கரத்தில் இறுக்கமாக ஒரு தாமிரக் காப்பும் வெள்ளி ப்ரேஸ்லெட்டும். ப்ரேஸ்லெட்டில் ஒரு நீளமான பெயர் ஆங்கிலத்தில். சாய்வான எழுத்துக்களில். அவரது தோளின் மேல் அடர்த்தியான ஒரு சால்வை நழுவுவது போல் நழுவாமல் மூடித் தொங்கிக்கொண்டிருந்தது. சிவப்பும் கத்திரி நிறமும் கலந்த ஒரு குழப்பமான நிறம், மத்தியில் வெள்ளைப் பருத்திப் புடைப்புகள், வடிவங்கள். பெரும்பாலும் மிருகங்கள், செடிகொடி தாவரங்கள். அடர்ந்து கறுத்திருந்த கன்னக் கதுப்புகளுக்குக் கீழ் திருத்தமாக முறுக்கி விடப்பட்ட மீசை - அடர்த்தி குறைச்சல். அதனாலேயே விண்ணென்றிருந்தது. கன்னக் கதுப்புகளுக்கு மேல் இரண்டு கண்கள். எதிரேயிருப்பவற்றைத் தாண்டி வேறெங்கோ பார்க்கும் கண்கள்.</p> <p>ஃபாபியென் அவர்கள் முன்னர் மெனு அட்டைகளை அடுக்கி வைத்தாள். முதியவர் நிமிர்ந்து பார்த்தார். ‘சாருக்கு என்ன வேணும்னு கேளும்மா’ என்றார். சார் அருகில் விலகி ஒதுங்கி அமர்ந்திருந்தவன் ‘ஐயா என்ன சாப்பிடறீங்க’ என்றான். வேட்டியை மடித்துக் கட்டியிருந்தான். கோடு போட்ட அண்டர்வேரின் விளிம்பு தெரிந்தது. சந்தன நிற காதிகிராஃப்ட் துணியில் சட்டை. மீசை இல்லாத கறுத்த முகம், எண்ணெய் தேய்த்து அழுத்தி வாரப்பட்டிருந்த தலைமுடி. ‘ஐயா என்ன சாப்பிடறீங்க’.</p> <p>ஐயா தண்ணீர் மட்டும்தான் குடிப்பார். காய்ச்சி ஆறவைத்த தண்ணீர். ஐயாவுக்கு காய்ச்சி ஆறவைத்த தண்ணீர் சொல்லப்பட்டது. அனைவரும் தண்ணீர் மட்டுமே சொன்னார்கள். சிறுவன் ரோஸ்மில்க் வேண்டும் என்று கேட்டான். வயோதிகர் அதட்டினார். அதெல்லாம் இங்கே கிடைக்காது. ஐயா ரோஸ்மில்க் கிடைக்குமே என்றார். பையனுக்கு கொடுப்பதுதானே. அதெல்லாம் இல்லை ஐயா, அவன் தண்ணி சாப்பிடுவான். ஐயா இரண்டு வடை ஒரு காப்பி மட்டும் சொன்னார். எண்ணெயை ஒற்றி உறிஞ்ச காகிதங்களும் கேட்டார். பிறர் காப்பி மட்டும் சொன்னார்கள். ஐயாவுக்கு அருகிலிருந்தவன் மெதுவாகப் பேச்செடுத்தான்.</p> <p>‘கொஞ்ச நஞ்சம் இல்லை ஐயா, இருவதாயிரம் ருவா ஐயா, இவனை நம்பித்தான் கொடுத்தேன்.’</p> <p>வயோதிகர் மெதுவாகக் குறுக்கிட முயன்றார்.</p> <p>‘ஐயா என்கிட்ட இல்ல, அந்தப் பய என் வீட்டில் இருந்தப்ப இவன் வந்தான், அவங்க ரெண்டு பேரும் பேசிட்டிருந்தாங்க, அவங்களா ஒரு முடிவுக்கு வந்து இவன் பணத்தைக் குடுத்திருக்கான் ஐயா, நான் வீட்டில் இருந்ததைத் தவிர பணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஐயா’ என்றார்.</p> <p>ஐயா ஏதோ சொல்ல வருபவர் போல சற்று அசைந்தார். பின் எதுவும் சொல்லாமல் நிறுத்திக்கொண்டார். மீசையை வருடிக்கொண்டார். அருகிலிருந்தவன் குரலை உயர்த்தினான்.</p> <p>‘பொய் சொல்றான் ஐயா கூதிபுள்ள. அறுதலிக் கூதிமவனோட இவனும் கூட்டுக் களவாணி ஐயா’ என்றான். வயோதிகர் கையிலிருந்த காப்பித் தம்ளர் நடுங்கியது. பஞ்சடைந்து கறுத்திருந்த கண்களில் மெலிதாக நீர் தளும்பியது. அவரது வயிறு மெதுவாகத் துடித்து அடங்கியது. அருகில் அமர்ந்திருந்த சிறுவனைப் பார்க்கும் திராணி இல்லாமல் தலையைக் குனிவதா நிமிர்ந்து பார்ப்பதா என்று தெளிவற்று உத்தேசமாக மைக்கா மேஜையில் விரல்நுனிகளை சிலமுறை மெதுவாகத் தட்டினார். நாக்கால் உதடுகளை வருடி ஈரமாக்கிவிட்டுக்கொண்டு சுற்றிலும் பார்த்தார். ஒன்றிரண்டு பேர் திரும்பி இவர்களைப் பார்த்தார்கள். ஐயா தனது காப்பியைச் சுவைத்துக்கொண்டிருந்தார். வடை ஒன்றில் மென்மையான சந்திரவடிவக் கடி ஒன்று. சிறுவனின் வாய் மெதுவாகத் திறந்து திறந்து மூடியது. சுவரோரமாக ஒடுங்கிக்கொண்டான். வயோதிகர் மறுபடி மெதுவாகப் பேச முயன்றார்.</p> <p>‘இல்லை ஐயா - அவன் அயோக்கியப் பயலை என் வீட்டுக்குள்ள விட்டதுதான் நான் செஞ்ச ஒரே தப்பு ஐயா, மத்தபடி பணத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ஐயா’ என்றார்.</p> <p>‘கொடுத்த வாக்கைக் காப்பாத்தணுமுல்ல’ என்றார் ஐயா. ‘ஐயா பையன் மேல சத்தியமா சொல்றேன் அந்தப் பணத்துல ஒரு பைசா கூட நான் எடுக்கலை ஐயா, அதுமாதிரி செய்யிற ஆளும் இல்லை ஐயா நானு’ என்றார் வயோதிகர் உடைந்த குரலில். </p> <p>ஐயாவின் முகம் ஒரு பெரும் சாந்தத்தை அடைந்துவிட்டிருந்தது. ஐயாவின் கருத்தைத் தொடர்ந்து வேறு கருத்துக்கள் சொல்லப்படுவது ஐயாவுக்குப் புதிது அல்லது பழக்கமில்லை என்பதை வெகு தெளிவாகச் சொல்லியது சாந்த முகம். ஐயாவுக்கு அருகிலிருந்தவன் பொறுமை இழந்தது போல் தெரிந்தான். ‘என் வீட்டுல பொண்ணு கல்யாணத்துக்கு இருக்கு ஐயா. இவன் இப்பிடியே சொல்லிட்டிருந்தான்னா பெறகு நான் இவன் கைகாலைத் தறிச்சு விக்கவேண்டியதுதான்’ என்றான்.</p> <p>‘கெவுரவமானவரு, கொடுத்துருவாரு’ என்றார் ஐயா. அடுத்த வடையை செய்தித்தாள் காகிதங்கள் இடையில் வைத்து மெதுவாக அழுத்தி எடுத்தார். வயோதிகர் தொடர்ந்து மெலிதாக நடுங்கிக்கொண்டிருந்தார். மெதுவாக காப்பித்தம்ளரை வாயில் வைத்து ஒரு மிடறு குடித்தார். வாய்க்கடையோரம் மெலிதாக காப்பி வழிந்தது. நெருக்கமாகக் கட்டம்போட்ட மடித்த கர்ச்சீப் ஒன்றால் வாயை ஒற்றிக்கொண்டார். பையன் தொடையிடுக்கில் கைகளை வைத்திருந்தான், குழம்பிய கண்களுடன் அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனுக்குத் தூக்கம் வந்தது. பசிக்கவும் செய்தது.</p> <p>‘ஆடி முத வாரத்துக்குள்ள திருப்பிடுவாரு’ என்றார் ஐயா, வயோதிகரை நேராகக் கண்களில் பார்த்து. அவர் கண்களைத் தாழ்த்திக்கொண்டார், தலை தானாக ஆடியது. ‘நம்மளை இதுக்காவ மறுபடி வர வச்சிராதிங்க, நமக்கு நேரம் இல்ல, நல்லாவும் இருக்காது’ என்றார் ஐயா. இடுப்பில் இளகியிருந்த வேஷ்டியை உட்கார்ந்தவாறே இறுக்கிக் கட்டிக்கொண்டார் வயோதிகர். அவர் தலை தொடர்ந்து அசைந்துகொண்டிருந்தது. </p> <p>‘ரொக்கம் இருக்குமுல்ல’ என்றார் ஐயா. ‘நாலரை வட்டி போட்டுருங்க’ என்றார் தொடர்ந்து. சால்வையை சரிப்படுத்திக்கொண்டார். வயோதிகர் ஏதும் சொல்லவில்லை. கண்ணாடியின் அரக்கு நிறச் சட்டத்துக்கும் சுருக்கம் விழுந்த கன்னத்துக்கும் மத்தியில் வெகு வேகமாக ஒரு நீர்க்கோடு வழியத் தொடங்கியது. சிறுவன் விசும்ப ஆரம்பித்தான். ஐயாவும் மற்றவனும் அழாதீர்கள் என்றார்கள், பையன் பயப்படுகிறான் பாருங்கள், அவனை ஏன் அழைத்து வந்தீர்கள் என்றார்கள். ஃபாபியென் காப்பிக் கோப்பைகளை எடுக்க வந்தாள். அழும் சிறுவனைப் பார்த்தாள் - வாம்மா வெளிய நாடகம் காட்டுறேன் என்றாள். பையன் அவளுடன் சென்றான். பின் வாசலில் ஒரு ஐந்து நிமிடம் வைத்து வேடிக்கை காட்டுகிறேன் என்று சொல்லி அழைத்துப் போனாள். வெளியே சூனியக்காரி வேட்டையை மறுநிகழ்த்தல் செய்துகொண்டிருந்தார்கள். விவரந்தெரியாத சிறுவனுக்கு எதுவும் புரியவில்லை. ஃபாபியென் கதைகளைச் சொன்னாள். பல நூறு வருடங்கள் முன்னால் பெண்களைப் பிடித்துக்கொண்டு போய் சூனியக்காரியா இல்லையா என்று விசாரித்தார்கள். சூனியக்காரி தெரியும்தானே என்றாள். பிள்ளைபிடிக்கும் கிழவியா என்றான் சிறுவன். ஆமாம், கிட்டத்தட்ட அதே மாதிரிதான் என்றாள் ஃபாபியென். </p> <p>இந்த சூனியக்காரிகள் கிழவிகள் மட்டுமில்லை, உன்னைப்போல சிறுமிகளும் இளம் பெண்களும் பெண்களும் இருந்தார்கள் என்றாள் தொடர்ந்து. அவர்களை நீதிமன்றத்தில் விசாரிப்பார்கள், சூனியக்காரி என்றால், மரத்தில் கட்டி வைத்து ஒரு சிறு நெருப்புத்துண்டத்தைப் பொருத்திப் போடுவார்கள். நெருப்பு சூனியக்காரிகளை சர்க்கஸுக்குக் கூட்டிப்போகும். சர்க்கஸுக்குப் போயிருக்கிறாயா?</p> <p>ஆம். </p> <p>அப்படியானால் சரி. இவர்களை நெருப்பு நேராக சர்க்கஸ் கயிறுகளில் தலைகீழாகத் தொங்கவிட்டுவிடும். கயிறுகளில் தொங்கி விளையாடுவார்கள், சூனியக்காரியெல்லாம் அவர்களைவிட்டு உதிர்ந்துபோய்விடும், பிறகு திரும்ப வந்துவிடுவார்கள்.</p> <p>எங்கள் வீட்டில் ஒரு வெள்ளாடு இருந்தது. ஒரு நாள் அதைக் காணோம். அதுவும் சர்க்கஸுக்குப் போய்விட்டது. அப்பா சொன்னார்.</p> <p>ஃபாபியென் ஒருகணம் தான் சொல்வதை நிறுத்தி, சிறுவனைப் பார்த்தாள். அவனது தலை குனிந்திருந்தது. வலது கால் விரல்கள் இட வலமாக மெல்லிய புழுதியில் அரைவட்டமொன்றை வரைந்துகொண்டிருந்தன. மௌனத்தைத் தொடர்ந்து நிமிர்ந்து பார்த்தான். அவளது வலக்கண்ணின் நீலமும் இடக்கண்ணின் வெண்பழுப்பும் ஒரே நேரத்தில் அவனைப் பார்த்தன. </p> <p>ஆனால் அது திரும்ப வரவில்லை. அதன் பெயர் மல்லிகா என்றான்.</p> <p>பெயர் யார் வைத்தார்கள்.</p> <p>நான் வைத்த பெயர். மல்லிகா ரேணுகா இரண்டில் எதை வைப்பதென்று தெரியவில்லை, இரண்டு விரலையும் அப்பாவிடம் காட்டினேன், மல்லிகா விரலைத் தொட்டார்.</p> <p>உள்ளே போகலாமா என்றாள்.</p> <p>இன்னும் கொஞ்ச நேரம் இங்கே இருக்கிறேன் என்றான். அருகிலிருந்த மரத்தில் ஒரு பூச்சட்டி தொங்கிக்கொண்டிருந்தது. தொட்டிக்குள்ளிருந்து சரம் சரமாகச் செடி. தொட்டிக்கடியில் போய் நின்றான். அவன் தலை தொட்டிக்கு அடியில் பொருந்தியது, முகத்தைச் சுற்றிப் பச்சைச் சடை தொங்கியது. உள்ளிருந்து சிரித்தான். கலங்கிய கண்களை சிரிப்பு அகற்றித் தெளிவித்தது. ஆஹா என்றாள் ஃபாபியென். பச்சை முடி என்றாள். </p> <p>அவர்கள் உள்ளே போனார்கள். வயோதிகர் தனித்து அமர்ந்திருந்தார். சிறுவனைப் பார்த்தார். வீட்டுக்குப் போகலாம் அப்பா என்றான்.</p> <p>கொஞ்ச நேரம் உக்கார்ந்துட்டுப் போகலாம்ப்பா. கொஞ்சம் படபடன்னு வருது. பசிக்குதா என்றார்.</p> <p>பையனுக்கு ஒரு ஸ்பெஷல் ரவா போடும்மா, முறுகலா என்றார். உங்களுக்கு எதுவும் வேண்டாமா என்றார்.</p> <p>அவனதுல இருந்து ஒரு வாய் சாப்பிட்டுக்கறேன். </p> <p>* * *</p> <p>அப்புறம் என்றான் ஸ்க்ரூவாலா. அவன் வலது கையில் ஒரு கண்ணாடித் தம்ளர், இரண்டங்குல அடிப்புறம். அல்ஃபோன்ஸ் தனது மடிக்கணினியை இன்னும் வாகாக அவனை நோக்கித் திருப்பி வைத்தான். நீங்கள் கொடுத்த மரீ மூஹா மாதிரியே தான். வைக்கலாம், பிரச்னை இல்லை. இது வெறும் மேல்பூச்சுச் சமாச்சாரம் தான்.</p> <p>இல்லை, என்றான் ஸ்க்ரூவாலா.</p> <p>இல்லை. சரி. நான் சொல்லவந்தது - இதை வரைவதன் மூலம் காரின் கட்டுமானத்துக்கு ஏதும் பிரச்னை இருக்காது.</p> <p>அப்போது சரி. மலர்க் கிரீடம் உட்பட?</p> <p>மலர்க் கிரீடம் உட்பட.</p> <p>ஸ்க்ரூவாலா சிரித்ததை அல்ஃபோன்ஸ் பார்த்தான். முதலில் நெற்றி அசைந்தது, நெற்றியோரங்களில் இரண்டு சுருக்கங்கள் எழுந்தன, மூக்கு விடைத்தது, வாய் ழ வை அவிழ்த்தது மாதிரி விரிந்து காதுகளை நோக்கி ஏறத்தொடங்கியது, பல்லிடுக்குகளில் ஓட்டைகள் தெரிந்தன. வயிறு குலுங்கியது, ஹ்க்ஸ் ஹ்க்ஸ் என்று சப்தம் வரத் தொடங்கியது, இரண்டு கீழ்க் கடைவாய்களிலும் எட்டுப் பற்கள் தங்கம். ஹ்ள்க் ஹ்ள்க் ஹ்ள்க். ஹ்ள்க் ஹ்ள்க் ஹ்ள்க்.</p> <p>வண்டி ரொம்ப தூரம் போகுது, தெற்கே. ஹ்ள்க் ஹ்ள்க். நீயும் உள்ளே இருப்பே தானே.</p> <p>அப்புறம்? என்றான் அல்ஃபோன்ஸ்.</p> <p>* * *</p> <p>அஜு ஜர்தா பாக்கெட்டை இரண்டு முறை உரசிப் பிரித்து வாயில் போட்டுக்கொண்டான். மீதியை மடித்து ரப்பர்பேண்ட் போட்டு சுற்றி கால்சராயின் வலது பாக்கெட்டுக்குள் சொருகிவைத்தான். சென்னை என்று போர்டு போட்டு சிமெண்ட் வெட்டுச்சதுரங்களுக்குள் வரிசையாய் பஸ்கள். காலியாயிருந்த ஒன்றின் பின் படிக்கட்டுகளில் ஏறி அமர்ந்துகொண்டு மெதுவாகக் குதப்பினான். வரிசையாகப் பெட்டிக்கடைகள். தெருவில் காய்ந்த குடிகாரன் வாந்தியைத் தகடாய்ச் சீவி எடுத்து சணலில் தொங்கவிட்டது போல எண்ணற்ற மஞ்சளும் சிவப்பும் ஆரஞ்சும் கறுப்பும் அடர் நீலமும் கலந்த வண்ணங்களில் பத்திரிகைகள். ஒரு கடைக்குக் கீழே ஒரு பெரிய குடும்பம். மூன்று பெரிய எவர்சில்வர் தூக்குவாளிகள், உடைத்த கடலைப்பருப்பும் மஞ்சள் நிறச் சோறும் பிடிக்குக் கீழ் ஒட்டியிருந்தது. பெரும் மூக்குத்தி ஒன்று கறுத்த கூர்மையான மூக்கு மேல். துரு நிற ஃபுல்வாயில் சேலை ஒல்லியான உடம்பைச் சுற்றி. மொட்டை அடித்து சந்தனம் பூசப்பட்ட தலைகள். மெலிந்த மணிக்கட்டுகளில் காசிக்கயிறுகள். </p> <p>அவன் க்ரைம் நாவல்களை வாங்குவதை படியிலிருந்து அஜு பார்த்தான். நாவல்களை புரட்டிப் பார்த்துவிட்டு சட்டை மேல்பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தான். கொடுத்துவிட்டு உள்ளே சொருகப்படாத சட்டையின் இடுப்பருகில் தொட்டுப் பார்த்துக்கொண்டான். ஒரு சிகரெட் வாங்கி கயிற்றில் பற்றவைத்துக்கொண்டான். கால்களுக்கிடையில் தரையில் வைத்திருந்த பையைத் தூக்கிக்கொண்டு நடந்து ஒரு சிமெண்ட் பெஞ்சின் ஒரு ஓரத்தில் அமர்ந்து புத்தகத்தைப் பிரித்தான். பின்பு எழுந்து, சுற்றி நடந்து பேருந்து நிலையத்துக்கு வெளியே வந்தான். மங்காப்ரம் மங்காப்ரம் மங்காப்ரம் என்று படியில் தொங்கிக்கொண்டு படிகளில் கண்டக்டர்கள் தாவி ஏறினர். அஜுவைப்பார்த்துப் புன்னைகைத்துவிட்டு மங்காப்ரம் செல்லும் படிகளில் தாவி ஏறியது ஒரு வௌவால். அங்கிருந்த ஒரு சிமெண்ட் காம்பவுண்ட் மேல் அவன் அமர்ந்து கால்களுக்கிடையில் பையை வைத்துக்கொண்டு புத்தகத்தைப் பிரித்தான். மங்காப்ரம் மங்காப்ரம்கள் சில கடந்து சென்றன.</p> <p>மெட்ராஸுக்குப் போறீங்களா சார் என்றான் அஜு. அவன் நிமிர்ந்து பார்த்தான், சிறிது நேரம் ஏதும் சொல்லவில்லை.</p> <p>மங்காபுரம் போறேன் என்றான்.</p> <p>ஃபைவ் மினிட்ஸுக்கு ஒரு தரம் பஸ் இருக்கு என்றான் அஜு.</p> <p>சிறிது நேரம் இருவரும் மௌனமாக இருந்தார்கள்.</p> <p>லேடீஸ் இருக்காங்க, பாக்குறீங்களா என்றான் அஜு. அவன் புத்தகத்தை மூடினான். மறுபடி சற்று நேரம் மௌனமாக இருந்தான்.</p> <p>ஒரு பெரிய சூட்கேஸுடன் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு ஒரு நபர் கடந்து போனார். தலையில் சந்தனம் இருந்தது. அஜூ அவரைச் சுட்டிக் காட்டினான்.</p> <p>நேத்து அவருக்கு அரேஞ் பண்ணினேன். பாருங்க, என்று அவரை நோக்கிக் கையசைத்தான். அவர் திரும்பிப் பார்த்து அசௌகரியமாகப் புன்னகைத்து திருப்பத்தில் மறைந்தார். சேஃபான இடம், ரெய்டு பிரச்னை ஏதும் கிடையாது. </p> <p>உங்களுக்கு எந்த ஊரு சார்.</p> <p>மாரி ஒடிசலாக இருந்தான். ஒரு பெர்முடா டவுசர் போட்டிருந்தான். சந்தன நிறத்தில் ஒரு பனியன். மூன்று குச்சியர்கள் கைகால்களை வெவ்வேறு திசைகளில் ஆட்டி நின்றிருந்தார்கள். குச்சியர்களின் தலை எரிந்துகொண்டிருந்தது. இறுகிய தாடை, அடர்ந்து கறுத்த நிறம், கைகளை மார்புக்குக் குறுக்காகக் கட்டிக்கொண்டபோது இறுகிய சதை திரண்டு சரிந்தது. அட்வான்ஸ் இர்நூர் பா குட்த்தா போதும் சார் என்றான். அவன் பர்ஸைத் திறந்து நான்கு தாள்களை எண்ணி நீட்டினான். இங்கேயே வெய்ட் பண்ணுங்க சார், ரெடி பண்ணிட்டு ஃபைவ் மினிட்ல வர்றேன், அஜு உங்க கூட இருப்பான் என்றான் மாரி. அஜு தனது கால்சராய்ப் பாக்கெட்டிலிருந்து ஒரு கிங்ஸ் பாக்கெட்டை உருவினான். சார் தம் அடிக்கறீங்களா. பஸ்கள் தொடர்ந்து கடந்து போய்க்கொண்டிருந்தன. சாராயத் திருப்பம் போல வளைவிலிருந்து திடீரென்று ஒரு பஸ் திரும்பி டயர்கள் கிறீச்சிட பிரேக் அடித்து இரண்டடி நகர்ந்து பிரேக் அடித்து இரண்டடி நகர்ந்து பிரேக் அடித்து சர்ரென்று சீறிப் போனது. கண்டக்டரின் கக்கத்தில் தோல் பை, அலுமினியத் தகடுள் அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகள். ஒருவன் காலில் தேய்ந்து நிறம் மங்கத்தொடங்கியிருந்த பழுப்பு நிற குவோ வாடிஸ். அஜுவும் ஒரு குவோ வாடிஸ் போட்டிருந்தான். மாரி காலிலும் அதைப் பார்த்ததாய் நினைவு. மாரி சற்று நேரம் கழித்து வந்து சேர்ந்தான்.</p> <p>குளிச்சிட்டிருக்கு, இருவது நிமிசத்துல ரெடியாயிரும் சார், ஆனா மேலோ நாநூர் பா கேக்குது சார். மொதல்லயே ஃபுல்லா வேணுமாம். ஆனா வொர்த்து சார். </p> <p>அவ்வளவுதான் இருக்கு என்கிட்ட.</p> <p>வந்தீங்கன்னா இதெல்லாம் சொல்ல மாட்டீங்க சார். தெனம் கெடைக்காது இது. ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் பலமனேர்லர்ந்து வந்துது. பலமனேர் போயிருக்கீங்களா, சும்மா வராது சார் பொண்ணுக அங்கேர்ந்து. </p> <p>அவன் மையமாகத் தலையசைத்தான். கொஞ்சம் பொறு, வர்றேன்.</p> <p>ஒரு ரூபாய் கொடுத்துக் கழிப்பறைக்குள் நுழைந்து வாட்ச் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்து எண்ணிப் பார்த்தான். சரியாக நானூற்றைம்பது ரூபாய் இருந்தது. ஒரு ஐம்பது ரூபாய்த் தாளை மறுபடி உள்ளே சொருகி வைத்தான். மீதியை பர்ஸுக்குள் வைத்து பின் பாக்கெட்டில் சொருகி வைத்துக்கொண்டான். கால்வாய் அடர் பச்சையும் கறுப்புமாக இருந்தது. மஞ்சள் வர்ணம் அடித்திருந்த சுவர் மூத்திரத்தில் இளகி நிறம் மாறி அடர் மஞ்சளாய் ஒரு கோபுரம் தெரிந்தது. ஜிப்பைக் கழற்றி கோபுர உச்சியில் பெய்தான், புன்னகைத்துக்கொண்டான். மூத்திரம் போகையில் தோலை இழுத்தான். மூத்திரம் போனவாறே விறைத்தெழுந்த பூவாளி தூவிப் பொழிந்தது கோபுரம் மேல். துளிகளை உதறி, விறைத்திருந்த குறியைப் பிடித்து இரண்டு முறை குலுக்கிவிட்டு வெளியே வந்தான். முகத்தில் ஒரு புன்னகை, மெலிதாய். மாரியிடம் பணத்தைக் கொடுத்தான். கால் மணி நேரத்துல வந்துடறேன் சார். சரி, அப்ப நான் போய் முகம் கைகால் கழுவிட்டு வந்துடறேன். மறுபடிக் கழிப்பறைக்குள் வந்தான். இரண்டு தகர டப்பாக்களில் தண்ணீர் எடுத்துக்கொண்டு கட்டைகள் குறுக்காக அடித்திருந்த கதவுகளைத் தள்ளித் தள்ளிப் பார்த்துக் காலியாக இருந்த கழிப்பறைகள் ஒன்றுக்குள் நுழைந்து கொண்டியைப் போட்டுவிட்டு தண்ணீர் டப்பாக்களைத் தரையில் வைத்தான். கால்சராய் நுனிகளைச் சுருட்டி விட்டுக்கொண்டான். பையைத் தோளுக்குக் குறுக்காக மாட்டிக்கொண்டு கால்சராயைக் கழற்றிக் கீழே சரித்து முழங்கால்களை அகட்டிக் கீழே விழாமல் தொடையருகில் தேக்கிக்கொண்டான். ஜட்டியை இறக்கிக்கொண்டு அசைக்கத் தொடங்கினான். கக்கூஸ் குழியை நேராகப் பார்த்தான், திரும்பிக்கொண்டான். இடுப்பு பின்னால் போய் முதுகு விடைத்திருந்தது. முழங்கை இடித்து கதவின் தகரநெளிசல் விடுபட்டு டுங் என்றது. அந்தக் கழிப்பறைக்கு ஒரு ஜன்னல் வைத்திருந்தார்கள். மேலிருந்து கீழாய் நான்கு கம்பிகள். அதில் இரண்டு கம்பிகளைப் பிடித்து ஒரு குரங்கு உள்ளே பார்த்துக்கொண்டிருந்தது. தொங்கிக்கொண்டிருந்திருக்கவேண்டும். நடுவிலொருதரம் சுவற்றில் காலை ஊன்றி உன்னியிருக்கவேண்டும், பார்த்துக்கொண்டிருந்த அதன் தாடை இரு வினாடிகளுக்குப் பின்னோக்கிப் போனது.</p> <p>ஐந்து ரூபாய்க்கு போட்டி வாங்கி ஒவ்வொன்றாக உருவிச் சாப்பிட்டான். அஜூ அங்கே இல்லை. சற்று நேரம் பொறுத்திருந்து இன்னொரு போட்டி வாங்கி ஒவ்வொன்றாக உருவிச் சாப்பிட்டான். அஜூவைக் காணோம். சுற்றிலும் பார்த்தான். மெதுவாக தொண்டை அடைத்தது, வயிற்றுக்குள் கசப்பாக ஏதோ சுரந்தது. பஸ் ஸ்டாண்டைத் தாண்டி மாரி போன காம்ப்ளெக்ஸுக்குள் நுழைந்தான். இரண்டு துணிக்கடைகள், கண்ணாடித் தடுப்புகளுக்கப்பால் சீராக மடித்து டப்பாக்களுக்குள் அடைக்கப்பட்டிருந்த சட்டைகள், பெரிதாக ஹால்மார்க் என்று போட்டிருந்த ஒடிசலான ஒரு வாழ்த்து அட்டைக் கடை, சலூன், கண்ணாடிக் கடை, ஷூக்கடை, முதல் மாடிக்குப் போகப் படிக்கட்டுகள், திரும்பி நடந்தான். மேலும் துணிக்கடைகள், துணிக்கடைகள், கவரிங் நகைகள் விற்கும் கடை ஒன்று, அலங்காரப் பொருட்கள் விற்கும் கடை இன்னொன்று, இன்னொன்று, மாரி காம்ப்ளெக்ஸ் வாசலில் நின்றிருந்தான். ஐம்பது ரூபாயை அவனிடம் கொடுத்தான்.</p> <p>பாப்பாவுக்கு இன்னிக்கு நேரம் இல்லியாம். ஊருக்குத் திரும்பிப் போக இது போதும்ல?</p> <p>அவன் வாய் இரண்டு முறை திறந்து திறந்து மூடியது. மாரி கைகளை பாக்கெட்டுகளுக்குள் விட்டிருந்தான். இடக் கை இளகி இருந்தது, வலது பாக்கெட்டுக்குள்ளிருந்த கை வித்தியாசமாக இருந்தது, முன்னங்கையில் தசைகள் புடைத்திருந்தன. திரும்பி நடந்தான். இவன் பின்னால் தொடர்ந்து நடந்தான். சில கடைகள் வரை. குறுக்கே தொங்கிக்கொண்டிருந்த தோள் பைகளை ஒதுக்கி விட்டுக்கொண்டு கடைகளூடாக மாரி நடந்தான். அவன் சில கடைகள் தாண்டி நின்றான். மாரி காம்ப்ளெக்ஸை விட்டு இறங்கி இடப்புறமும் வலப்புறமும் பார்த்து டிடிக் என்று பிளாட்ஃபாரத்திலிருந்து துள்ளி இறங்கி சாலையைக் கடந்து மறுபுறம் போனான். சிக்னல் விழுந்து குறுக்கே வாகனங்கள் மெதுவாகத் தேங்கத் தொடங்கின.</p> <p>* * *</p> <p>‘அந்தக் குரங்கு பின்னாடி வண்டியை விடு’ என்றான் ஸ்க்ரூவாலா. மத்தியான வெயில் தாறுமாறாக வெளுத்திருந்தது. கூரைகள் வெயிலில் அசைந்தன. அந்தப் பெரும் கார் சீரற்ற தார்ச் சாலையில் தன் பெரும் பற்சக்கரங்களைப் பதித்து மெதுவாக ஊர்ந்து குரங்கின் பின் நகர்ந்தது. குரங்கு ஒரு நெக்லஸைத் திருடியிருந்தது. குரங்குக்குக்குக் கிட்டத்தட்ட நூற்றைம்பது வயது ஆகியிருந்தது. நடையில் மெலிதான தள்ளாட்டம் தெரிந்தது. வீட்டுத் திண்ணைகளில் சிலர் படுத்திருந்தனர். கார் நகர நகர, இழுபடும் பாராசூட் போல் அதன்பின் புழுதி தொடர்ந்தது. குரங்கு ஆடி ஆடி நடந்தது, தனது வலது கையில் நெக்லஸைச் சுழற்றியவாறு நடந்தது. இடது கையை அகட்டித் தூக்கி வைத்திருந்தது. ஆடி ஆடி நடந்தது.</p> <p>வீட்டுக்குள் நுழைந்தது. கார் பெரும் இரும்பு வாசற்கதவுகள் தாண்டி நுழைந்து நின்றது. அல்ஃபோன்ஸ் கீழே இறங்கிப் போனான். குரங்கு நெக்லஸை ஐயா கையில் கொடுத்தது. ஐயா குரங்குக்கு ஒரு வாழைப்பழம் கொடுத்தார். ஐயா காரைப் பார்த்தார். இவளைக் கூட்டிட்டு வரலாமா என்றார். தாராளமா என்றான் அல்ஃபோன்ஸ். ஆனா முன் சீட்டுல போடலாம் என்றான். சரி என்றார் ஐயா.</p> <p>வளைவு வழியாக மற்ற கதவு வழி தெருவில் கார் நுழைந்தது. ஊர் எல்லை தாண்டும் வரை ஸ்க்ரூவாலா எதுவும் சொல்லாமல் மௌனமாக அமர்ந்திருந்தான். பிறகு ஐயாவைச் சற்று நெருங்கி தன் வாயைத் திறந்து காட்டினான். </p> <p>ரொம்ப நாள் தேடிக் கண்டுபிடிச்சேன் இதை. என்றான்.</p> <p>உருக்கி, மாத்தி, உருக்கி, மாத்தி, உருக்கி, மாத்தி, உருக்கி, மாத்தி.</p> <p>ஐயா எதுவும் புரியாமல் அமர்ந்திருந்தார். </p> <p>ரெண்டு பேராத்தான் சவக்குழியைத் தோண்டுனோம். அப்ப என்னால் பெரிய கடப்பாரையோ மம்பட்டியோ தூக்க முடியாது.</p> <p>ஒரே ராத்திரியில தோண்டி எடுத்தோம். அம்மாவை உள்ளே வைச்சப்ப எப்படி இருந்தான்னு ஞாபகம் இல்ல. ஆனா அது அப்படியேதான் கெடந்தது. கழட்ட முடியல. இறுகிப் போயிருந்தது. வயர் கட்டர் வைச்சு கத்திரிச்சு எடுத்தோம். பிறகு மறுபடி ஆணி அடிச்சு உள்ளே இறக்கி மண்ணை நிரப்பிட்டோம். மறுபடிக் கல்லை நட்டு வச்சிட்டோம். நிறைய பூ போட்டுட்டோம். </p> <p>வீட்டுக்குப் போனோம். வாளிக்குள்ள இருந்து ஆரஞ்சு கப்பை நாந்தான் எடுத்துட்டு வந்தேன். பாதித் தண்ணி. அதில ஊறப் போட்டுட்டு டீ போட்டுக் குடிச்சோம். பழைய டூத்பிரஷ் ஒண்ணை எடுத்து சோப்புத்தண்ணியில முக்கி நாந்தான் அதைக் கழுவிச் சுத்தம் செஞ்சேன், நெறைய மண்ணு. கா மணி நேரம் சுத்தம் செஞ்சிருப்பேன்.</p> <p>அடுத்த நாள் சங்கரங்கோயில் எடுத்துட்டுப் போனேன். </p> <p>இருபது வருசம் கழிச்சு மறுபடி சங்கரங்கோயில் போனேன். ஆசாரியைப் புடிச்சேன். ஆசாரியில இருந்து ஆரம்பிச்சேன்.</p> <p>இன்னொரு அஞ்சு வருசம். மாத்தி மாத்தி மாத்தி மாத்தி.</p> <p>பாதியத்தான் புடிக்க முடிஞ்சது. உருக்கி வச்சிருந்தேன். எங்கே பத்திரமா வைக்கிறதுன்னு தெரியல, வாய்க்குள்ள வச்சுக்கிட்டேன். மீதியையும் புடிச்சுருவேன். அதுவும் வாய்க்குள்ள போகும், ஆனா பொறுத்திருக்க முடியலை, உங்களைப் பாக்க வந்துட்டேன் என்று புன்னகைத்தான்.</p> <p>இடம் மாறி ஐயா பக்கத்தில் அமர்ந்துகொண்டான் ஸ்க்ரூவாலா. வாயைத் திறந்து காட்டினான். </p> <p>அல்ஃபோன்ஸ், கயிற்றை எடுத்து சிவந்தி கைகளையும் கால்களையும் கட்டினான். முன் சீட்டில் சிவந்தி முறுக்கிக்கொண்டு துள்ள முயன்றது. வாயைப் பிளந்து ஒரு கிட்டியைத் திணித்து ஸ்க்ரூவைத் திருக்கினான். கிட்டி முழுதாக வாயைப் பிளந்தது. ஒரு பெரிய அடர்ந்த ரப்பர், உலோகத் தகடை நிறுத்தி அதன் மேல் சிவந்தியைச் சாய்த்து வைத்தான். சிவந்தியின் வாய்க்குள் துப்பாக்கியை நுழைத்து விசையை அழுத்தினான். அனைத்தையும் ஒரு பெரிய, கனமான சதுரமான பைக்குள் போட்டு மூடினான். மறுபடிக் காரைக் கிளப்பினான். </p> <p>ஐயா ஜன்னல் வழியாக வெளியே பார்த்தார். வெளியே நின்றிருந்த ஒருவனை ஐயா பார்த்தார். அவன் ஐயாவின் தலையை நோக்கிச் சுட்டான். ஸ்க்ரூவாலாவும் அல்ஃபோன்ஸும் அப்படியே அமர்ந்திருந்தார்கள். ஐயா பதறி ஒதுங்க முயன்றார். குண்டு காருக்குள் வரவில்லை, தெறித்தது போலிருந்தது. நாலைந்து பேர் காரின் இரு புறங்களிலும் நின்றிருந்தார்கள், சிலரது கைகளில் கைத்துப்பாக்கிகள், சிலரது கைகளில் தானியங்கித் துப்பாக்கிகள். அனைவரும் ஐயாவின் தலையைக் குறிவைப்பது போலிருந்தது. அனைவரும் தொடர்ந்து சுட்டார்கள், ஆனால் ஒரு குண்டும் காருக்குள் வரவில்லை, முன் சீட்டிலிருந்து பொசுங்கிய சதை மணம் மட்டும் வந்தது. </p> <p>____________________________________________</p> <p>ஓவியம்: ஹென்றி ஃப்யூஸெலி (தீக்கனவு) </p>

Posted by சன்னாசி on March 12, 2010 02:46 AM · permalink

  <p><object width="480" height="385"><br /> <param name="movie" value="http://www.youtube.com/v/FGRx2U2uZsw&#038;hl=en_US&#038;fs=1&#038;"></param> <param name="allowFullScreen" value="true"></param> <param name="allowscriptaccess" value="always"></param><embed src="http://www.youtube.com/v/FGRx2U2uZsw&#038;hl=en_US&#038;fs=1&#038;" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="385"></embed></object> </p>

Posted by சன்னாசி on March 12, 2010 01:17 AM · permalink

  <p>”திஸ் இஸ் ஆஸ்சம்”.</p> <p>“தாங்ஸ் பிரவீன்”</p> <p>“ கலக்கிட்டீங்க இப்படி வீட்ட வெச்சியிருப்பீங்கன்னு நினைச்சு கூட பாக்கல”</p> <p>” இதெல்லாம் ஒரு விஷயமே இல்ல. நான் எப்பவுமே வீட்ட க்ளீனாத்தான் வெச்சுப்பேன். தட்ஸ் அவ் ஐ வாஸ் ப்பாட் அப். அவளும் அப்படித்தான். முதல்ல வீடு, சுத்தம். அப்புறம் தான் மத்ததெல்லாமே. இங்க தான் தினமும் புழங்கறோம், அது பாக்க ஒழுங்கா இல்லனா எப்படி. பட் ஐ நோ எல்லோரும் இப்படி நினைக்கறதில்ல” என்று காப்பியை உறிந்து கொண்டே சொன்ன கணேஷை வியந்து போய் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.</p> <p>“ வெரி ட்ரூ. ஆனா பார்த்திபன் கனவுல ஸ்ரீகாந்த் சொல்லுவான், வீடு என்ன மியூசியமா? எல்லாம் ஒழுங்கா அடுக்கி வைச்ச மாதிரி இருக்க. இவர் அதை புடிச்சுண்டுட்டார். அண்ட்ராயர் முதக்கொண்டு ஹால்ல தான் அலக்கழியும்.”</p> <p>”அரூ..இட்ஸ் ஓக்கே&#8230;” என்றவனை திரும்பி ஒரு முறைப்பு விட்டு மீண்டும் ஆரம்பித்தாள், “உக்காந்த இடத்தில காப்பி வரணும். குடிச்சிட்டு எங்கயாவது ஹீட்டர் கீழ வெச்சுட்டுப் போய்டுவார். கேர்லெஸ் நம்பர் ஒன். எத்தனை சட்டை வச்சிருக்கார்னு கேளுங்க, தெரியாது. மை டாட் வுட் கில் மி இஃப் ஐ வாஸ் லைக் திஸ். இவரோட ஆபீஸ் தான் இவரோட முத வைஃப். நானும் பசங்களும் இவரோட ஹாபி” என்று கண்ணை சுழற்றியபடி பேசிக் கொண்டே போனாள் எனதருமை அருணா.</p> <p>அந்த இடத்தை விட்டு மெல்லமாய் நகர்ந்தேன். இந்த சனிக்கிழமை மாலை எனக்கு சரியில்லை போலும். </p> <p>அந்த வீடு பளிச்சென்று இருந்தது. வேக்யூம் செய்யப்பட்ட கார்பெட்டுகள், துடைத்து வைக்கப்பட்ட கண்ணாடிகள். எல்லாம் வைத்த இடத்தில் வைத்த மாதிரி இருந்தது. நடராஜர் சிலை துடைக்கப்பட்டு வருபவர்களை வரவேற்கிற மாதிரி வைக்கப்பட்டிருந்தது. போஸ் ஸ்பீக்கரில் மாலி குழலூத, ஒருவித ஆஃப்டோன் கலர் சுவரில் கோலாஜாக பேமிலி போட்டோஸ். டிபிகல் சஃப்யர்பன் ஹவுஸ். பாஸ்டனில் இருந்து இருபத்தி இரண்டு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ஆஷ்லாண்டில், 3000 சதுர அடியில் கட்டப்பட்ட ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் வீடு. ஐநூறாயிரம் என்று சொன்னதாய் ஞாபகம். வீட்டு வாசலில் <em>தி ராஜாரமன்ஸ்</em> என்று போர்டு சொல்லிற்று.</p> <p>“இதல்லாமே எப்பவுமே இப்படித் தான் இருக்குமா” என்று அருணா கணேஷின் மனைவியிடம் விசாரித்துக் கொண்டிருந்தாள். அர்விந்தும் சமிக்‌ஷாவும் அவர்களின் குழந்தைகளுடன் மாடிக்கு சென்றுவிட, அந்த நடராஜர் சிலையை ரசித்தபடி நின்றிருந்தேன்.</p> <p>“பசங்க சாப்டுட்டாங்க. கமான் லெட்ஸ் ஹாவ் டின்னர்”, கணேஷின் மனைவி செல்வி.</p> <p>டேபிளில் பரிமாறப்பட்ட டின்னர். எங்களுடைய வீட்டில் எப்பவுமே செல்ஃவ் சர்வ் தான். இதற்கெல்லாம் எங்கே நேரம் இருக்கிறது. விருந்தினர் வந்தாலும் கூட டைனிங்கில் எல்லாவற்றையும் வைத்து விட்டு, அவரவர் எடுத்துக் கொள்ளும் ப்ஃபே சிஸ்டம் தான். </p> <p>“எப்பவுமே இரண்டு செட் கட்லெரி இருக்கும். ஒண்ணு டிஷ்வாஷர்ல இருந்துச்சுன்னா, அடுத்த செட். அதனால வீ கேன் டேக் விசிட்டர்ஸ் எனி டைம். சுத்தமா வெந்நீர்ல க்ளீன் பண்ணி உள்ள வெச்சுருவோம்” என்றெல்லாம் செல்வி சொல்லிக் கொண்டே போக, அரு என்னை கொஞ்சம் பாவமாய் பார்த்தாள். கணேஷ் பெருமிதத்தில் இன்னும் ரெண்டு கரண்டி உருளைக்கிழங்கை எடுத்துப் போட்டுக் கொண்டார்.</p> <p>“சூப்பர் சமையல். ரொம்ப தாங்ஸ். இதோ கை அலம்பிட்டு வந்து மேல பேசரேன்” என்று சொல்லிக் கொண்டே கெஸ்ட் பாத்ரூமை தேடிக் கொண்டே போனேன். </p> <p>“டாடி!” என்று சமிக்‌ஷா கத்துவது மாடியிலிருந்து கேட்டது. </p> <p>“ஒண்ணும் இருக்காது. அவளுக்கு எப்பப் பாத்தாலும் ஒரே அடம்” என்று சொன்ன அருணாவுக்கு காது கொடுக்காமல், அப்படியே மேலே ஓடினேன். </p> <p>எதிர்ப்பட்ட ரூமில் லைட் போடப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்த போது, சமிக்‌ஷா ஸ்பான்ஜ் பாப் பொம்மைக்கு போட்டி போட்டுக் கொண்டிருந்தாள். ”ப்ளீஸ் டோண்ட் ஃபைட் வித் ஹிம்” என்றேன். “சரி டாடி!” என்று சொல்லிவிட்டு மீண்டும் சண்டையிட ஆரம்பித்தாள்.</p> <p>அந்த குழந்தைகள் ரூம் கூட சுத்தமாய் இருந்தது. எல்லா பொம்மைகளையும், ஒரு ஹாமக்கில் கட்டி தொங்க விட்டிருந்தார்கள். தரை சுத்தமாக இருந்தது. இரண்டு குழந்தைகள் அந்த ரூமில் வசிப்பதற்கான அறிகுறி கூட இல்லாமல். வீட்டின் மேல் கவனம் செலுத்த வேண்டும் என்று தோன்றியது. அதைவிட வீட்டுக்கு போனவுடன் அருணாவிடமிருந்து விழம் டோஸ் பற்றி கவலை அதிகரித்தது.</p> <p>ரூமை விட்டு வெளியே வந்தேன். இதைத் தவிர இரண்டு பெட்ரூம்கள் இருப்பதாக பட்டது. லைட் போடாததால் சரியாக தெரியவில்லை. கை அலம்பாதது ஞாபகம் வந்தது. எதிரில் பாத்ரூம் தெரிய, உள்ளே சென்று லைட் போட்டேன். </p> <p>கையலம்பி விட்டு, பக்கத்தில் தொங்கும் டவலில் கை துடக்கும் போது கண்ணாடியை பார்த்து, ”நீயும் இருக்கியே வீட்ட பத்திக் கூட அக்கறையில்லாம” என்று ரொம்பவும் மனதுக்குள் பேசினேன். டீஷர்ட்டை இழுத்து விட்டுக் கொண்டேன். அப்போது தான் அங்கே பரவியிருந்த அமைதி உரைத்தது. எதிரில் பாத் டப்பை மூடியிருந்த கர்ட்டன் அழகாயிருந்தது. துணியா ப்ளாஸ்டிக்கா என்று தொட்டுப் பார்க்க நினைத்தேன். ப்ளாஸ்டிக். </p> <p>அப்போது என்னவோ தோன்ற, அந்த திரைச்சீலையை சற்று தள்ளி டப்பினுள் எட்டிப் பார்த்தேன். பயந்து போய் கையை பின்னுக்கு இழுத்தேன். </p> <p>மூன்று&#8230;மூன்று பேர், ஒருவர் மேல் ஒருவர் இடித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். சீலையை திறந்த என்னை சற்றே பதட்டத்துடன் பார்த்தார்கள். அவர்கள் மனிதர்கள் என்று சொல்ல முடியாது. குள்ளமாய், க்ரே கலரில், ரொம்பவே அழுக்காய். தலையில் இரண்டு சிறிய வெள்ளைக் கொம்புகள் தெரிந்தன. நகங்கள் விரல் நீளத்துக்கு வளர்ந்திருந்தன. சீராய் ஆனால் வெளியே தெரிகிற மாதிரி மூச்சு விட்டுக் கொண்டு, என்னை ரொம்பவே பயத்துடன் பார்த்துக் கொண்டு.</p> <p>எதாவது பேச வேண்டுமா என்று கூட தெரியாமல், திரைச் சீலையை மூடி விட்டு, லைட்டை அணைத்து வெளியே வந்தேன். குழந்தைகளை முதலில் கிழே கூட்டிக் கொண்டு செல்ல வேண்டும். பாத்ரூமிற்கு எதிரில் இருந்த அலமாரிகளின் கதவை திறக்க ஏன் தோன்றியது என்று புரியவில்லை. மெதுவாய் சத்தமிடாமல் திறந்தேன். </p> <p>டிஷ்யூ பேப்பர், க்ளீனெக்ஸ், காரெல், ப்ளாஸ்டிக் பேக் இத்தியாதி இத்தியாதி எல்லாம் இருந்தன. தலை சற்று மேலே உயர்த்தி மேல் அலமாரிய