இன்னும் கொஞ்ச தூரம் தான்
கால்களைக் கொஞ்சம்
வலுவாக்கு.

அடுத்தவன் கனவுகளுக்குள்
படுத்துக் கிடக்கும்
உன் பார்வைகளின்
சோர்வகற்று.

அறுவடைக் காலத்தில்
நண்டு பிடிப்பதை விட
கதிர் அறுப்பதல்லவா
அவசியம்,

வா,
இன்னும் கொஞ்ச தூரம் தான்.

அதோ தெரிகிறதே
ஓர் வெளிச்ச பூமி
அங்கு தான் செல்லவேண்டும்.

பரிச்சயமான
பிரதேசமாய் தோன்றுகிறதா ?
அது வேறெங்கும் இல்லை
உன்னுள் தான் இருக்கிறது.

நீதான்
வெகுதூரம் சென்று விட்டாய்.

Posted by சேவியர் on August 27, 2008 12:09 PM · permalink

 

விடாமல் ஒடும்
கடிகாரங்களே
உங்கள்
ஓட்டத்தை
முடித்துக் கொள்ளுங்கள்.

புல்லாங்குழல்களே
உங்கள்
துளைகளை
பொத்திக் கொள்ளுங்கள்.

குயில்களே
பருக்கைகளுக்காக மட்டுமே
இனி
அலகு திறவுங்கள்.

இசைக் கருவிகள்
மௌனம் மட்டும்
வெளித்தள்ளட்டும்.
பல்லவி தவறாத பாடல்கள்
இனி வேண்டாம்.

பூக்களே
பேசாமல்
மொட்டுக்குள் சென்று
பூட்டிட்டுக் கொள்ளுங்கள்.

நகர வேண்டாம் நதிகளே
நின்ற நிலையிலேயே
உறைந்து விடுங்கள்.
இல்லையேல்
ஆவியாகிக் கரைந்து விடுங்கள்.

கொஞ்ச காலம்
என்னைத் தொடாதே
தென்றலே,
வருடாதே வெயிலே.

எழுப்பாதீர்கள்
அதிகாலைச் சேவல்களே,
சிரிக்காதீர்கள்
அடிவான மின்னல்களே.

ஓட்டத்தை நிறுத்த மறுக்கும்
உங்கள்
ஒவ்வோர் அசைவும்
ஓடிப் போன
அவள் நினைவுகளை
அள்ளி அள்ளிக் கொட்டுகிறது.

கொஞ்சம்
கருணை காட்டுங்கள்.
புதைத்ததையே  நான்
மறக்கும் வரை
பொறுத்திருங்கள்.

தோண்டி எடுக்கச் சொல்லி
தொந்தரவு செய்யாதீர்கள்.

Posted by சேவியர் on August 26, 2008 03:15 PM · permalink